இந்தியாவில் ஸ்மார்ட்போன்களின் விலை தொடர்ந்து குறைந்து வருவதால்
அதன் உபயோகம் அதிகரித்து வருகிறது. இதனால் செல்போன் மூலமாக இணையதளம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை ஆண்டுக்கு 25% அதிகரித்து வருவதாக மார்கன் ஸ்டான்லி நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த எண்ணிக்கை 2018-ம் ஆண்டில் 52 கோடியாக உயரும் என குறிப்பிடப்பட்டுள்ளது. தொலைத் தொடர்பு தொடர்பான அறிக்கையில் மார்கன் ஸ்டான்லி நிறுவனம் 2016-ம் நிதி ஆண்டில் செல்போன் மூலம் இன்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 33 கோடியாக உயரும் என தெரிவித்துள்ளது. ஸ்மார்ட்போன்களின் விலை தொடர்ந்து குறைந்துவருவதால் இதை உபயோகிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும் விரைவான அலைக்கற்றை சேவை, ஆன்லைன் சேவை ஆகியனவும் இதை உபயோகிப்போர் எண்ணிக்கை அதிகரிக்கக் காரணமாகும். 2018-ம் ஆண்டில் ஒட்டு மொத்தமாக வாடிக்கையாளர் எண்ணிக்கை 25 சதவீத வளர்ச்சியை எட்டும். இதன் மூலம் 21 கோடியாக உள்ள வாடிக்கையாளர் எண்ணிக்கை 51.90 கோடியாக உயரும் என்றும் சராசரியாக ஒரு நபர் நுகர்வு 750 எம்பி அளவுக்கு இருக்கும் என்று அறிக்கை தெரிவிக்கிறது. இந்த அளவானது ஆசியாவின் சராசரி அளவாகும் என்றும் அறிக்கை குறிப்பிட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் ஸ்மார்ட்போன்களின் விலை 200 டாலரிலிருந்து 50 டாலராகக் குறைந்துவிட்டது என்றும் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்திடம் (டிராய்) உள்ள புள்ளிவிவரப்படி 2013-ம் ஆண்டு செப்டம்பர் வரை இன்டர்நெட் வாடிக்கையாளர் எண்ணிக்கை 21 கோடியாகும். இதில் 90 சதவீதம்பேர் செல்போன் மூலம் பயன்படுத்துவோராவர். அதாவது 18.80 கோடி பேர் செல்போன் மூலமாகவும், 70 லட்சம் பேர் குறுகிய அலைக்கற்றை மூலமாகவும் (256 கேபிபிஎஸ்) பயன்படுத்துகின்றனர். 1.5 கோடி பேர் பிராட்பேன்ட் வாடிக்கையாளராவர். டேட்டா கார்ட் மூலமான வளர்ச்சி அடுத்த கட்டத்தில் அதிகமாக இருக்கும் என்றும் இப்போது 10 சதவீதமாக உள்ள வளர்ச்சி அடுத்த இரண்டு ஆண்டுகளில் 23 சதவீத அளவுக்கு உயரும் என்றும் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு 3ஜி அலைக்கற்றையில் 2ஜிபி விலை ரூ. 750 ஆக இருந்தது. இப்போது விலை ரூ. 450 ஆகக் குறைந்துள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆசிய பிராந்தியத்தில் பிற தொலைத் தொடர்பு நிறுவனங்கள் வசூலிக்கும் கட்டண விகிதத்தைக் காட்டிலும் இந்திய நிறுவனங்கள் வசூலிக்கும் தொகை மிகக் குறைவாக உள்ளதாக மார்கன் ஸ்டான்லி அறிக்கை தெரிவிக்கிறது. வாட்ஸ் அப், ஸ்கைப் ஆகிய வற்றை உபயோகிப்போர் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 comments Blogger 0 Facebook

Post a Comment

 
PC TRICKS © 2013. All Rights Reserved. Share on Ads Network Reviews. Powered by Blogger
Top